Friday, November 11, 2011

REVOLUTION 2020 - புத்தக விமர்சனம்

Five point someone, One night@ call center, The 3 mistakes of my life, 2 states போன்ற விற்பனையில் சாதனை படைத்த நூலின் ஆசிரியர் சேத்தன் பகத்தின் சமீபத்திய வெளியீடு இப்புத்தகம். காதல், காமம், நட்பு, சோகம், நகைச்சுவை என எல்லாமும் கலந்து கட்டி அடிக்கும் இவரின் புத்தகத்தில். இந்த நூலும் அதற்கு விதிவிலக்கல்ல. இவரின் Five point someone நாவலை தழுவி எடுக்கப்பட்ட 3 இடியட்ஸ் மெகா ஹிட்டடித்தது. இந்த நாவலின் உரிமையையும் வாங்க கடும் போட்டி என்று செய்தி. ஒரு முழு நீள மசாலா படம் பார்த்த அனுபவத்தை தரும் இந்நாவலின் கதை -----



வாரணாசியில் கங்கா டெக் நிர்வாகவியல் கல்லூரி திறப்பதற்காக சேத்தன் சிறப்பு விருந்தினராக செல்கிறார். அந்த கல்லூரியின் நிறுவனர் கோபால் விழா முடிந்ததும் சேத்தனை தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.அங்கு  கோபால் அளவுக்கு அதிகமாக மது அருந்தி மயக்க நிலைக்கு செல்கிறார். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரிடம், தன் கதையை கோபால்  சொல்வது  போல கதை விரிகிறது.

கோபால் -அம்மா இல்லாத அவனுக்கு அப்பாவின் தினசரி ரொட்டி போரடித்ததால்,பள்ளியில் பிரேயர் நடக்கும் நேரத்தில் ஆர்த்தியின்
கேக்கை எடுத்து தின்று விடுகிறான் . ஆசிரியையிடம் மாட்டிக்கொள்வதில் இருந்து மோதலுடன் ஆர்த்தியுடன் நட்பு ஆரம்பம் ஆகிறது.

பள்ளி பருவத்தில் இருந்தே கோபாலுக்கு ஆர்த்தியும், ஆர்த்திக்கு கோபாலும் தான் தோழர்கள். கோபாலின் தந்தையின் ஆயுள் அவருக்கு சொந்தமான நிலத்தை அவரின் சகோதரரிடம் இருந்த மீட்பதிலேயே கழிகிறது. அவருக்கு கோபாலை IIT  அல்லது NIT  யில் சேர்த்து இஞ்சினியர் ஆக்க வேண்டும் என்பது கனவு.

அதற்காக இரண்டு முறை முயற்சித்தும் தோல்வியே கிடைக்கிறது. ராகவும் அவனது பள்ளித்தோழன். அவன் IIT -JEE தேர்ச்சி பெற்று அந்த ஊரிலேயே IT -BHU  வில் சேர்கிறான்.

கோபால் இரண்டாம் முறை தேர்வு பயிற்சிக்காக கோட்டா சென்ற போது ஆர்த்திக்கும் ராகவுக்கும் காதல் மலர்ந்து விடுகிறது. கோபால் தேர்விலும் தோல்வியுற்று, காதலிலும் தோல்வியுறுகிறான். அவன் தந்தையும் அதே நேரத்தில் இறந்து விடுகிறார்.

ஆனாலும் ஆர்த்தியுடன் நட்பு தொடர்கிறது.அதுதான் அவனது ஒரே ஆறுதல். நண்பன் ஒருவன் தயவினால் உள்ளூர் MLA  வின் உதவியுடன் அவனது நிலத்தை மீட்கிறான். அந்த நிலத்தில் MLA  வின் பணத்தில் பொறியியல்  கல்லூரி ஒன்றை அமைக்கிறான்.

ராகவ் பத்திரிக்கை துறையில் நுழைந்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவன். அந்த உள்ளூர் MLA  வின் கங்கை தூய்மையாகும் திட்டத்தில் செய்த ஊழலை வெளிக்கொண்டு வந்து அவர் பதவி விலக செய்கிறான்.

கோபாலின் உண்மையான , ஆழமான அன்பினால் ஆர்த்தி அவனிடம் தன் உடல் , மனம் இரண்டையும் இழக்கிறாள். ராகவை விட்டு பிரிய முடிவெடுக்கிறாள். அதற்காக ராகவை சந்திக்க கோபால் செல்கிறான்.அங்கு அரசியல்வாதிகளின் ஊழலால் பாதிக்கப்பட்டு துன்பத்தில் வாடும் ஏழைக் குழந்தையைப் பார்க்கிறான்.

அதன்பின் அவன் பங்களாவுக்கு வந்து அவனுள் என்ன மாற்றம் ஏற்படுகிறது? ஆர்த்தியுடன் அவன் சேர்ந்தானா என்பதே முடிவு.

நாவலின் சுவாரசியங்கள் :


IIT நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்காக மாணவர்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாதவை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே ஒருவன் பனிரெண்டாம் வகுப்புக்கான IIT  புத்தகங்களை படித்தாக வேண்டும். அப்பொழுதுதான் அவன் தேர்ச்சி பெற வாய்ப்பு இருப்பதாக நிறைய பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அதற்காக மாணவர்களை படுத்தும் பாடு நிறைய.அவர்கள் சிறு வயது கொண்டாட்டங்களுடன் , இளமையும் சேர்த்தே கழிகிறது. IIT யில் வருடத்தில் சேர்வது கிட்டத்தட்ட 9000 மாணவர்கள் தான். அந்த அனைவருமே வாழ்வில் உயர்ந்ததாக, பெரிய பதவியில் இருப்பதாக தெரியவில்லை. 
அதன் நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களில் சேரவே தனி நுழைவு தேர்வு. அந்த நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்க சில பயிற்சி நிலையங்கள் என நிகழ் கால உண்மைகளை இந்நூல் அலசுகிறது.


நான் நான்கு வருட இஞ்சினியரிங் படிக்க ஆன பணம், அந்த பயிற்சி நிலையங்களின் ஒரு வருட கட்டணத்தை விட குறைவு. ஏழை குழந்தைகளுக்கு மட்டுமல்ல, மிடில் கிளாஸ் குழந்தைகளுக்கே அது எட்டாக்கனிதான். என்னதான் படித்தாலும், ஏழை குழந்தைகளுக்கு IIT  வெறும் கனவாகவே தான் இருக்கும்.

பெற்றோரின் வற்புறுத்தலால் விருப்பே இல்லாமல் அத்தகைய பயிற்சிக்கு சேர்ந்து மூன்று வருட வாழ்க்கையை வீணாக்கும் பிரதிக் போன்ற எத்தனையோ மாணவர்கள் நம் நாட்டில் உண்டு.

பத்திரிக்கையில் சேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ராகவ் நினைத்தாலும், அவன் இஞ்சினியர் ஆக வேண்டும் என்று அவன் தந்தை கட்டாயப் படுத்துகிறார். இது இளைஞர்கள் அனுபவிக்கும் மற்றொரு இன்னல்...

தனி ஒரு மாணவன் ஒரு பத்திரிக்கையாளனாக பணி செய்வதற்கு அரசியல் வாதிகள் போடும் முட்டுக்கட்டைகள் மற்றொரு அத்தியாயம். அரசியல்வாதிகள்  கொடுக்கும் விளம்பரம் கிடைக்காதோ என எண்ணி , அவனை வேலையில் இருந்தே விரட்டும் பத்திரிக்கை, அவன் வெளியிட்ட செய்தியால் அவன் அலுவலகத்தை சூறையாடும் அரசியல்வாதியின் கைத்தடிகள் என நிறைய நிஜங்கள். ஆனாலும் ஒரு பத்திரிக்கையின்  ஆதாரமான உண்மை செய்தியால் மாற்றத்தை உண்டாக்க முடியும் என கதை ஆழமாக நிரூபிக்கிறது.

ஒரு கல்லூரி தொடங்க கொடுக்க வேண்டிய லஞ்சம் பற்றி  தெளிவாக சிவாஜி படத்தில் பார்த்தோம். இதிலும் கல்லூரி கட்டுவதில் ஆரம்பித்து, ஆசிரியர் நியமனம் முதல் அதிகாரிகளின் விசிட் வரை லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலையை படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள்.

எல்லாம் விட இந்த நாவலின் சிறப்பம்சம் ஆர்த்தி - கோபால் உண்மையான காதல். கங்கை நதிக்கரையில் படகு சவாரி செய்வதில் இருந்து சினிமா, காபி குடிக்க செல்வதிலிருந்து பள்ளி நேரம் வரை எல்லா நேரமும் இருவரும் சேர்ந்தே வளர்கிறார்கள், வாழ்கிறார்கள். கோபால் கோட்டா சென்ற நேரத்தில் ஆர்த்தியுடன் ராகவுக்கு ஏற்படும் காதலினால் பொங்குவதும், அதனால் ஆர்த்தியுடன் சண்டையிட்டு பிறகு அவள் நினைவு எழுந்து மீண்டும் சமாதனம் ஆவது என நிறைய கவிதை எபிசோடுகள்.

ஆர்த்தி ராகவை காதலித்தாலும்  கோபாலிடமே நீண்ட நேரம் செலவளிக்கிறாள். பெண்களின் மனதை புரிந்து கொள்வது கடினம் இல்லை என்பதை கோபால் நிரூபிக்கிறான். அவளின் மனதை ஒவ்வொரு கணமும் புரிந்து கொள்கிறான். முதல் முறை படகில் முத்தம் இட்ட பிறகு, அவளிடம் மீண்டும் சந்திக்கலாமா என கேட்கிறான்.   அவள் ஏன் ? எப்பொழுது ? என கேட்காமல் எங்கே என கேட்பதில் இருந்து, அவளின் மறு முத்ததிற்கான சம்மதத்தை உணர்கிறான்.

இப்படி ஆர்த்தி, கோபாலின் காதல் நாவல் முழுக்க நட்பு, கோபம், ஊடல், கூடல் என பல பரிணாமத்தில் மிளிர்கிறது.
ஆனால் இந்த நாவலின் முடிவு, எல்லோரும் விரும்புவார்களா என தெரியவில்லை. சேத்தனின் முந்தய நாவல்களைப்போல இதுவும் மகிழ்ச்சியான முடிவாகவே இருந்திருக்கலாம் என்பது எனது எண்ணம் .
மொத்தத்தில் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை விடாமல் படிக்க தூண்டும் ஒரு மசாலா நாவல் - Revolution  2020 

Wednesday, November 02, 2011

சிறு கவிதைகள்

வெயில்
மதிய வேலையில் நடக்கும்பொழுது
வெயில் என்று மூடிக்கொள்கிறாய் முகத்தை
உன் முகம் காணாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரிக்கிறது சூரியன்.

துரதிஷ்டம் 

 உன்  முகம் காணாத நாட்களை
மறுநாள் தேதி கிழிக்கும்போழுது பார்க்கிறேன்
ராசிபலனில் துரதிஷ்டம்

வாசனை

நீ தலை குளித்தவுடன்
எழும் வாசனையில்
பூக்கள் தலைக்குனிவுடன்
ஒப்புக்கொள்கிறது தன தோல்வியை .

நீலம்
வான நீல வண்ணம்
எனக்கும் பிடிக்கும் என்றாய்
இப்போதெல்லாம் நான் வானத்தை
பார்க்கிறேன் பொறாமையாய். 




செருப்பு
காலம் காலமாக மிதிபட்டே வந்தபோதும்
கல்லும் முள்ளும் குத்தி காயப்பட்டபோதும்
வாசலிலேயே நிறுத்தி அவமானப்படுத்தப்பட்ட போதும் 
போராட திராணியற்ற  செருப்பும்  
தாழ்த்தப்பட்ட சாதியோ !
பெண் சிசு 
வகை வகையாய் வரிசையுடன்
வளைகாப்பு கொண்டாடி
குடும்பம் கூடி சீட்டெடுத்து
செல்லப்பெயர் கண்டெடுத்து
குங்கும பூவும் இன்ன பிறவும்
குடம் குடமாய் கொண்டு வந்து
மாநகரில் மிகச்சிறந்த
மருத்துவமனையில் வந்துசேர்த்து
தாய்சேய் நலப்பிரிவில்
ஸ்கேன் பண்ணி பார்த்த பிறகு
தாய் மட்டும் நலமா
வந்து சேர்ந்தா வீட்டுக்கு .

புத்தாண்டு கொண்டாட்டம்

யாம வேலையில் மிகுந்தது
வாலிபர் கூட்டமங்கே
விண்ணைப் பிளந்தது அதிர்வேட்டுகள் நாதம்
உணவு கொட்டி விளையாடினோர் ஓர் புறம்
ஆங்கே கூழுக்கும் வழியில்லை சேரிப்புறம்
கட்டித்தழுவினார் இருபாலர் வாஞ்சையோடு
அங்கே கதறி அழுதது நாட்டின் கலாச்சாரம்
Happy New Year  என ஐநிலங்களிலும்
பறந்தது குறுஞ்செய்தி - ஆங்கே
விரைந்து அடிக்கப்பட்டது தமிழுக்கு இறுதிமணி
எத்தனையாண்டு பல வந்தாலும்
இக்காட்சி மாறாது என் தாய்த்திருநாட்டில். 

இணைய வலை

படம் பார்க்கலாம் என கிளம்பி
பளபள ஆடை உடுத்தி
பட்டென்று அமர்ந்தான் கணினி முன்னே.


அழுக்கு லுங்கி அணிந்துகொண்டு
வாராத தலையுடன் துலக்காத பல்லுடன்
காட்டான்குப்பதில் அமர்ந்து கடகடவென அடித்தான்
"I m Victor frm USA"- குப்பனாகிய அவன் .

சில வருடம் மிதிவண்டி
சில நாள் நண்பனின் பைக்
பல நாள் பின்தொடர்வு என
பல வலை வீசியும் மயங்காத அவள்
ஒரே வாரத்தில் வீழ்ந்தால்
இணைய வலையில்.

இணைய தளத்தில் விண்ணப்பிக்கவும்
பல நிறுவனங்கள் அறிவிப்பு
அந்த தளம் எந்த ஊரில் என அறியாமையில்
குக்கிராமத்தில் நான்.

தேர்வில் என்பதுக்கு மேல்  என
காலம்காலமாக அப்பாவிடம் விட்ட கதை
கந்தலாகிப்போனது இணையத்தில்
முடிவுகள் பார்த்த அவரிடம். 

வாலிப வாரம்

சித்திரை முதல் பங்குனி வரை
எந்தத் திங்களிலும் புத்தகத்தை தொடாமல்
நித்திரையிலே மூழ்கி

வாழ்விலே என்றாவது முன்னேறுவேன் என
செவ் வாயாலே வெறும் வார்த்தைகளை வீசி

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது  என
கிடைத்த பெண்களின் பின் சுற்றித்திரிந்து

சூரிய குடும்பத்திலே பெரிய கோள் வியாழன்
எனது ஊரிலே பெரிய ஆள் நான் என
வாய் நிறைய வியாக்கியானம் பேசி

வெள்ளி நிற வண்டியிலே இரவு முழுதும்
ஊர் சுற்றி திரிந்து ஓய்ந்து

'' இந்த சனி பிடிச்ச கழுத எங்க உருப்பட போவுது" என
ஊர் உலகத்திடம் வசவுகள் வாங்கி

தன வாழ்விலும் ஞாயிறு மலருமென
கனவிலே மிதந்தான் கல்லாத மூடன். 

மொழி - சிறுகதை

அதிகாலை 4 .30  மணிக்கு நாக்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது ரகுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ரயில் நிலையத்தில் எழுதி இருந்த வாசகங்கள், அந்த மனிதர்கள் பேசிக்கொண்டிருந்த மொழிகள், அந்தக் காலை நேரத்திலும் ஆவி பறக்க விற்றுக்கொண்டிருந்த போஹா என அனைத்தும்.அவன் தன்னருகில் இருந்த சுரேஷை திரும்பிப்பார்த்தான். அவனுக்கும் அதே உணர்வு.

ரகு, சுரேஷ் இருவரும் கல்லூரி முடித்துவிட்டு வளாகத்தேர்வின் மூலம் ஒரு MNC நிறுவனத்தில் கிடைத்த  வேலையில் சேர நாக்பூர் வந்திருப்பவர்கள். நாக்பூரில் மராத்தி பேசுவார்களா , ஹிந்தி பேசுவார்களா என்ற குழப்பம் அவர்கள் முகத்தில் துளியும் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு இரண்டுமே தெரியாது. 

30 நாட்களில் ஹிந்தி புத்தகம் ஒன்றை 20  ரூபாய் கொடுத்து வரும் வழியில் வாங்கியதன் பயனாக அவர்களுக்கு ஒன்றிரண்டு வார்த்தைகள் பரிச்சயமாகி இருந்தது. நிறுவனத்தின் பனி நியமன ஆணையுடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் முகவரியும் இருந்த கடிதத்தை கையில் எடுத்துக்கொண்டான் ரகு.

ரயில் நிலையத்தின் வாசலை தனக்கு முன்னே சென்று கொண்டிருந்தவரின் துணையுடன் அறிந்துகொண்டனர். வாசலில் ஜெர்க்கின் அணிந்திருந்த ஒரு ஆட்டோ டிரைவர் இவர்களை நோக்கி வந்து , சுரேஷின் கையைப்பிடித்து இழுக்காத குறையை தனது ஆட்டோவுக்கு கூட்டிச்சென்றான்.

"கஹாங் ஜானா ஹை பாய் ?"

ரகு தன கையில் இருந்த கவரை அவன் முன் நீட்டினான்.

" உதர் ஜானே கே ஏக் சௌ ருப்யா (நூறு ரூபாய்) லகேகா ?"

" நஹி நஹி . ஒன் ஹண்ட்ரட் அண்ட் பிப்டி ஒன்லி " - சுரேஷ் பேரம் பேசிய திருப்த்யில் ஆட்டோவில் ஏறி அமர்ந்தான்.

"மச்சி. எப்டிடா ஹிந்தி அதுக்குள்ள உனக்கு புரிய ஆரம்பிச்சிடுச்சி ?" - ரகுவின் கேள்வி சுரேஷின் மனதுக்குள் சிறிது நேரம் பட்டாம் பூச்சிகளை பறக்கவிட்டது.

வட இந்திய  காலை நேர குளிர் அவர்கள் உடலை சில்லிட செய்தது. நிறுவன கடிதத்தில் வரும் பொழுது கொண்டு வரச்சொன்ன ஜெர்க்கின் அப்பொழுது அவர்களுக்கு அவசியமாய் இருந்தது .இருவருக்குமே ஜெர்க்கின் அணிவது அதுதான் வாழ்வில் முதல் முறை.

அறைக்கு வந்தவுடன் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில்  ஒவ்வொரு சேனலாக மாற்றிப் பார்த்தனர். தொண்ணூறு சேனல்களில் ஒன்று கூட தமிழ் சேனல் இல்லை. பயணக்  களைப்பை விட இது அவர்களுக்கு பெரிய களைப்பைத் தந்தது.

மறுநாள்தான் கம்பனியில் சேர வேண்டி இருந்ததால் , சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மதிய உணவிற்காக அருகில் இருந்த மெஸ்ஸுக்கு சென்றனர்.அங்கெ அவர்களுக்கு எண்ணையில் போடாத ரொட்டியும், டாலும் காத்திருந்தது .வேறு என்ன அங்கு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள அவர்களுக்கும் ஆசைதான். ஆனால் எப்படி கேட்பது, யாரிடம் கேட்பது என்று நினைக்கும் போதே அவர்களுக்கு பசி பாதி போய்விட்டது.

சிக்கன் இருந்தால் பரவாயில்லை என ரகுவிற்கு தோன்றியது. ஆனால் சிக்கனுக்கு ஹிந்தியில் என்ன என்று தெரியவில்லை. முட்டைக்கு அண்டா என புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருந்தது நினைவுக்கு வந்தது.

"பையா ! அண்டா கா அம்மா ஹை ?"
" க்யா?" - கடைக்காரன் ஆச்சர்யமாக பார்த்தாலும் அவர்களின் சைகையைக் கண்டு குறிப்பறிந்து விட்டான். 

" ரகு. ஹிந்தி தெரியாம ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்குடா. சின்ன வயசுல படிக்காம விட்டது தப்ப போச்சுடா"
"இங்க வந்துட்டம்ல. இன்னும் ரெண்டு மாசத்துல கத்துக்கலாம்டா .இதுக்கு ஏன்டா பீல் பண்ணனும் "
"அப்படி இல்லடா. மூணாவது மொழியா இத படிச்சி இருந்தா இப்ப உதவியா இருந்திருக்கும் இல்லடா. எல்லாம் நம்ம அரசியல்வாதிங்க பண்ணனது தாண்டா "
"அது எப்டிடா  சுரேஷ்.இன்னைக்கு தமிழ் நாட்டுல கட்டட கூலி வேலை செய்றவங்க, குறைஞ்ச சம்பளத்துக்கு கெடைக்கிராங்கனு தமிழ் நாட்டு கம்பனியில வேல பாக்கிறவங்க, பேங்க், PSU , மத்த மதிய அரசாங்க அலுவலகத்துல வேல பாக்கிறவங்கனு நம்ம மாநிலத்துல இருக்க ஹிந்தி பேசறவங்க எண்ணிக்கையும், தமிழ் நாட்டுல இருந்த இங்க வரவங்க எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒன்னாதாண்டா இருக்கும். அப்ப மத்த மாநிலத்துக்காரங்க எல்லாத்தையும் தமிழ் படிக்க கட்டாயம்னு சொல்லலாமாடா?"
"இப்பிடி பேசிப்பேசியே தாண்டா நாசமாப் போய்ட்டோம்.என்னமோ போடா"


Monday, October 31, 2011

அணு அணுவாய் - சவால் சிறுகதை போட்டி 2011

ரெயின் கோட் அணிந்த அந்த பெரிய உருவம் ஹோட்டலின் அதிகாரி அறையை நோக்கி நகர்ந்தது. 

"யாருய்யா , மொதல்ல பார்த்தது ?"

ஷர்ட்டும் லுங்கியும் அணிந்திருந்த அந்த அதிகாரி பவ்யமாக கை கட்டிக்கொண்டு பதில் அளித்தார் ."நைட் ஷிப்ட் முடிஞ்சு போற பையன் ரூம் செக் பண்ண காலைல போனப்ப இந்த ரூம் கதவு தொறந்து இருந்திருக்கு. உள்ள எட்டி பாத்தப்ப இவர் எந்த சலனமும் இல்லாம இருந்தத பாத்துட்டு என்கிட்ட சொன்னான் சார். அதான்  உங்களுக்கு போன் செஞ்சேன் சார்."
"என்ன அட்ரஸ் கொடுத்து இருக்கார்?".
" Dr. Rahul Gupta 
   Scientist - F,
   H-2, Homi Babha Colony,
   IGCAR, Kalpakkam"

எஸ்.பி கோகுல் IPS  என்று பொறிக்கப்பட்ட  கதவை தள்ளிக்கொண்டு வேகமாக நுழைந்தார் அந்த விசாரணை அதிகாரி.

காவல் உடையின் கம்பீரத்துடன் அமர்ந்திருந்த எஸ்.பி கனைத்துக்கொண்டே கேட்டார். "என்ன எசக்கி, எதாவது தகவல் கெடச்சுதா?. கேஸ் ரொம்ப முக்கியமானது. இறந்து போனது இந்திய அணுசக்தி கழக விஞ்ஞானி . மேல் இடத்துல இருந்து போன் மேல போன் வந்துட்டு இருக்கு. ஸ்பெசலா சி.பி ஐ ல இருந்து விவேக்னு ஆபீசர இந்த கேஸ் விசாரணைக்காக அனுப்பி இருக்காங்க."

"இறந்து போனவர் முகவரிக்கு போய் பாக்க சொல்லி  கல்பாக்கம் போலீஸ் கிட்ட சொல்லியாச்சு சார். ஹோட்டல்ல அந்த அறையை முழுசா செக் பண்ணியாச்சு சார். அவர் சூட் கேஸ் தவிர எந்த தடயமும் கெடைக்கல. அது அணுசக்தி துறை சம்பந்தமா கொஞ்ச புத்தகம், அவர் துணிகள், அப்பறம் ரிடர்ன் டிக்கெட் இதுதான் இருந்துச்சு சார். அவர் பாடிய போஸ்ட் மார்ட்டம் பண்ண அனுப்ப போறோம் சார். அது வந்தா தான் அவர் சாவு இயற்கையானதா இல்ல கொலையானு தெரியும் சார்."

"OK.Proceed" சொல்லிவிட்டு அலறிக்கொண்டு இருந்த தொலைபேசியை எடுத்து தன் காதுக்கு கொடுத்தார்.

வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து  தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த காரில் விவேக்கும், விஷ்ணுவும் வந்துகொண்டிருந்தார்கள்.
" விஷ்ணு, நீ கேஸ தனியா டீல் பண்ணு. சந்தேகப்படற மாதிரி எது இருந்தாலும் எனக்கு சொல்லு. நம்ம ரெண்டு பெரும் சந்திக்கிறத முடிஞ்ச அளவுக்கு தவிர்த்துடு. கேஸ சீக்கிரம் முடிக்கணும் ."
" ஓகே பாஸ். நான் மொதல்ல போயி அந்த ஹோட்டல்ல எதாவது துப்பு கெடைக்குதான்னு பாக்கறேன். "

விஷ்ணு அந்த ஹோட்டலுக்குள் நுழைந்த போது அதன் தினசரி பரபரப்பில் தன்னை இணைத்துக்கொண்டு இருந்தது.

" விஷ்ணு ப்ரம் சி.பி.ஐ. அந்த அறையை நன் செக் பண்ணலாமா ?"
" ஷூர் சார்" . அறை சாவியை எடுத்துக்கொண்டு விஷ்ணுவின் வேக நடையை பின் தொடர்ந்தார் அந்த ஹோட்டல் அலுவலர்.
விஷ்ணு அறை முழுவதையும் தேடிக்கொண்டிருந்த போது, கட்டிலின் கீழ் அது கிடந்தது. அதை எடுத்து பத்திரப்படுதிக்கொண்டார்.


"விஷ்ணு , போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் விஞ்ஞானி உடம்புல எதோ மர்ம விஷம் இருக்குனு சொல்லி இருக்கு. அது என்னனு பாரன்சிக்ல கொடுத்து கேட்டப்ப, அது அணு கதிர் வீச்சு வகைய சேர்ந்த ஒரு வகை நச்சுனு சொல்றாங்க.உனக்கு எதாவது தகவல் கெடச்சு இருக்கா? "

" பாஸ். நேத்து அந்த அறைக்கு  நான் போனப்ப அங்க சயின்டிஸ்ட் விசிடிங் கார்ட் கெடந்துது , அது பின்னால ஒரு ரகசிய குறியீடு இருந்துது. "

" அது என்ன அது. நீ எடுத்தது யாருக்காவது தெரியுமா ?"

" அந்த ஹோட்டல் மேனேஜர்  கூடவே வந்தான். அவன் எப்படியும் எஸ்.பி கிட்ட சொல்லிடுவான்னு நான் எஸ்.பி க்கும் அந்த குறியீட அனுப்பி வச்சுட்டேன். "
"அவசரப்பட்டுடியே விஷ்ணு. அந்த சயின்டிஸ்ட் மொபைல் நம்பர ட்ரேஸ் பண்ணணப்ப அதுல எஸ்.பி கோகுலுக்கு 4 கால் போயிருக்கு. அதனால அவரையும் சந்தேக லிஸ்ட்ல வச்சிருக்கேன்."

"நம்ம சி.பி.ஐ கத்துக்கொடுத்த முதல் பாடமே எல்லாரையும் சந்தேகப்படு தான் சார் .  உங்க மெய்லுக்கு அவருக்கு அனுப்பின குறியீட அனுப்பி இருக்கேன். அதுல இன்னொரு தகவலும் இருக்கு. அத கொஞ்ச புத்திசாலித்தனமா அனுப்பி இருக்கேன். பாத்துக்கங்க சார். "

விவேக் மெயிலில் இருந்து எடுத்த பிரிண்டில் நமிதாவின் கலகல பேட்டிக்கு நடுவில் இருந்து இரண்டு செய்தி துண்டுகளை ஸ்கேலால் வெட்டி எடுத்தார். விஷ்ணுவின் விளையாட்டுத்தனத்தை நினைத்து சிரித்துக்கொண்டே அந்த துண்டுகளை மேசை மேல் வைத்தார்.


"Sir.எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம். - விஷ்ணு."
"Mr .கோகுல் S W H2 6F.இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு."
  
படித்துக்கொண்டு இருக்கும்போதே விஷ்ணுவின் அழைப்பு மொபைலில் வந்தது.
" சார். கேஸ் கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரி. எனக்கு கெடச்ச குறியேடு R C H2 6F . இத வச்சி ராஜீவ் காலனில வீட்டு நம்பர் 2 , சிக்ஸ்த் ப்ளோர் போனப்ப, அந்த சின்ன  வீட்ல யாரும் இல்ல. அங்க உள்ள நுழைந்து செக் பண்ணி பார்த்தப்ப ஒரு லெட்டர் கெடைச்சுது சார். அத எடுத்துட்டு எஸ்.பி ஆபிஸ் வரேன் நீங்களும் வந்துடுங்க சார். "
அழகான கை எழுத்தில் எழுதப்பட்ட அந்த கடிதத்தை விஷ்ணு உரக்க படிக்க விவேக், எஸ்.பி உட்பட அனைவரும் கேட்டுக்கொண்டு இருந்தனர்.


"இந்திய அரசாங்கத்துக்கு ,
உங்கள் நாட்டின் கடைக்கோடியில் உள்ள சபிக்கப்பட்ட தமிழ் திருநாட்டின் குடிமகன் எழுதுவது.உலக நாடுகள் எல்லாம் ஒதுக்கி தள்ளிய , கேரளா, மேற்கு வங்க அரசுகள் வேண்டாம் என்று தள்ளிய அணு உலைகளை எங்கள் தமிழ் மண்ணில் நிறுவுவதால் நாங்கள் சபிகப்பட்டவர்கள்தான்.அணு சக்தியின்  கோர முகத்தை ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகியின் மூலம் காட்டியதோடில்லாமல் இப்பொழுது மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்து காட்டியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அணுவின் ஆட்டத்தை அனுபவத்தின் மூலம் கண்டு அணு உலைகளை மூடிக்கொண்டிருக்கிறது.இது அனைத்தும் தெரிந்தும் நீங்கள் யாரையோ திருப்திபடுத்த சொந்த நாடு மக்கள் மீதே அணு உலைகளை திணித்து வருகிறீர்கள். எங்கள் அமைதியான 20 ஆண்டு கால போராட்டம்  உங்கள் மனதில் எந்த வித மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. அத்தகைய அணு உலைகளின் தீமைகளை மறைத்துவிட்டு , நன்மைகள் என்ற பெயரில் பசப்புரைகளை பரப்ப உங்களால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ராகுல் குப்தாவுக்கு அணு கதிரின் தீமைகளை உணர்த்தும்  வகையில் கதிர் வீச்சு நிறைந்த வேதிப்பொருளை அவர் உடம்பில் செலுத்தி உள்ளேன். இது போன்ற அணு கதிர் எம்மக்களின் மீதும் வீசும் காலம் வெகு தொலைவில் இல்லை. இப்போதாவது அணு உலைகளின் விஷத்தன்மையை அரசு உணர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.இந்த கொலையை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்பதற்காகத்தான் அந்த இடத்தில என் முகவரியை ரகசிய குறியீடாக எழுதி வைத்து சென்றேன்.  ஒரு உயிரை பறிக்கும் காரியத்தை செய்து விட்டு இனி என்னால் நிம்மதியாக வாழ இயலாது. எனவே நானும் என் உயிரை நானும்  மாய்த்துக்கொள்கிறேன். என் கண்ணை எடுத்து தானம் செய்யுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், அதில அணு கதிர் வீச்சு  இல்லாத என் தாய்த்திருநாட்டைப் பார்ப்பேன் என்ற நம்பிக்கையுடன்".

Sunday, July 17, 2011

Deivathirumagal (தெய்வத்திருமகள் )விமர்சனம்

மதராசப்பட்டினம், பொய் சொல்ல போறோம் போன்ற மென்மையான படங்களின் இயக்குனர் விஜயின் இயக்கத்தில் வந்திருக்கும் படம். 
மன வளர்ச்சி குன்றிய ஒரு தந்தைக்கும் , ஒரு குழந்தைக்கும் இடையிலான பாசப்போராட்டம் தான் கதை.
ஊட்டி அருகில் இருக்கும் அவலாஞ்சி எனும் கிராமத்தில் ஒரு பேக்கரியில் வேலை பார்க்கும் விக்ரமுக்கும், பானுவுக்கும் பிறக்கும் குழந்தை நிலா. பானு இறந்த பிறகு குழந்தையே உலகம் என இருப்பவனிடமிருந்து குழந்தையை பிரித்து சென்று விடுகின்றனர் பானுவின் அப்பாவும், அமலா பாலும். வக்கீல் அனுவின் உதவியுடன் அந்த குழந்தையை விக்ரம் மீட்கிறாரா என்ன என்பது மீதி கதை. 
மன நலம் குன்றிய பாத்திரத்தில் விக்ரம். அவர் நடிப்பை பற்றி சொல்வது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போன்றது. நடை, பாவனை , பேச்சு என அனைத்து விதத்திலும் அசத்துகிறார். குழந்தை பிறந்தது அறிந்து மகிழ்வதும் , பானு இறந்தாள் என கேட்ட அடுத்த வினாடியே முகத்தில் வித்தியாசத்தை காட்டுவதும் , இறுதி காட்சியில் நீதி மன்றத்தில் குழந்தையுடன் சைகையில் பேசிக்கொள்வது, கதை எதுவும் தெரியாமல் குழந்தைக்கு கதை சொல்லும் காட்சி என விக்ரம் தான் ராஜாங்கத்தை படம் முழுதும் நிகழ்த்தி இருக்கிறார். கடைசி காட்சியில் படம் பார்த்த அனைவரும் கண்ணீர் விட்டது அவரின் நடிப்புக்கு சாட்சி .
.
நிலாவாக வரும் குழந்தை அத்தனை அழகு, நடிப்பிலும்.
'' நல்லவங்க சாமிகிட்ட போவாங்கனு சொல்றியே, அப்ப நீ நல்லவன் இல்லையா. ". என குழந்தை கேட்கும் கேள்விகளை கேட்கும் இடத்தில் அத்தனை வசீகரம்.
" யானை என் குண்டா இருக்கு " என நிலா கேட்பது  , " அது நெறையா சாப்பிடுது" என விக்ரம் சொல்வது. இப்படி படம் நிறைய குழந்தைகள் உலகத்தின் பதிவுகள் நிறைய.
பள்ளி போட்டியில் ஒரு குழந்தை ரைம்ஸ் தெரியாமல் முழிக்க, அது பரிசு பெரும் போட்டி என நினைக்காமல் அந்த குழந்தைக்கு ஓடி போய் சொல்லிக்கொடுப்பது என குழந்தைகளிடம் இருந்து பெரியவர்கள் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.
தந்தையிடம் பேசுவதாக நிலாவிடம் பேசுவது,கரஸ்பாண்டன்ட்டை டினோசர் என அழைப்பது  , இறுதி காட்சியில் விக்ரமை பார்த்ததும் சந்தோசத்தில் நம்மையும் மகிழச்செய்வது என நிலா அனைவரயும் கவர்கிறாள். 
குழந்தையுடன் விக்ரம் பேசும் வெகுளித்தனமான வசனங்களில்  வசனகர்த்தா தெரிகிறார். 
" டாக்டர்கிட்டயும்  வக்கீல்கிட்டயும்தான் பொய் சொல்லக்கூடாது, ஆனா டாக்டாரும் வக்கீலும் பொய் சொல்லலாம் " என படம் முழுக்க நம்மை கடந்து செல்லும் நல்ல வசனங்கள் நிறைய .
அனுஷ்காவின் இடுப்பை விட நடிப்பு நன்றாகவே இருக்கிறது. கேஸ் கிடைக்காமல் திண்டாடுவதும், விக்ரம் நிலா காணாமல் போனதை விவரிக்கும்போது அறுவை தாங்காமல் தப்பிக்க சந்தானத்துடன் பிசியாக இருப்பது போல காட்டிக்கொண்டு எஸ்கேப் ஆவது, பின்பு விக்ரமின் உண்மை நிலை அறிந்து அவருக்காக நாசருடன் மோதுவது என அவ்வளவு அழகு. நெற்றியில் திருநீறு கீற்றலுடன் அழகாக இருக்குகிறார். 
அவருக்கும் அவரது தந்தைக்குமான உரசல்களும், விக்ரம் வந்த பின்பு அது சரி ஆவது என அது ஒரு சின்ன கவிதை. 
ஊட்டியில் பாஸ்கர் மனைவி மேல் சந்தேகப்படுவதாக வரும் கதை தேவை இல்லாததாக தோன்றினாலும் உறுத்தவில்லை . 
அனுஷ்காவின் தோழியாக வருபவரின் காதல் கதை, சந்தானத்தின் டைமிங் என சீரியசான கதையில் நகைச்சுவையும் கதையை கெடுக்காமல் நன்றாகவே இருக்கிறது. 
அமலா பால் , கார்த்திக் என கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள். அமலா பால் அழகாக இருக்கிறார் என்பது கொசுறு செய்தி.  
ஊட்டியின் அழகை நீரவ் ஷாவின் கேமரா அழகாக காட்டுகிறது. விக்ரம் கட்டிபிடித்தவுடன் வரும் அந்த பட்டு தேவை இல்லை என்றாலும், கேமரா கோணங்களும், சைந்தவியின் குரலும், அனுஷ்காவும் இருப்பதால் அப்படி ஒரு உணர்வு வராமல் இருக்க செய்கிறது.
ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையில் சில இடங்களில் நெகிழ வைக்கிறார். விக்ரம் கதை சொல்லும் பாடல், குழந்தைக்கு பொருள் வாங்க செல்லும்போது வரும் பாடல் என கதையின் ஓட்டத்திலே அனைத்து பாடலும் வருவது நன்றாக இருக்கிறது. 
விக்ரமின் மனைவியாக வருபவரை காட்டமல் வசங்கள் மூலமாகவே அவர்களின் உறவை சொல்வதும், அவரின் புகைப்படத்தை மங்கலான வெளிச்சத்தில் காட்டுவது என அவரை காட்சிப்படுத்திய விதம் அழகு. 
எந்த இடத்திலும் உறுத்தாத நடிப்பு, லாஜிக் மீறாத திரைக்கதை , சரியான நடிகர்கள் தேர்வு என விஜயின் உழைப்பு நன்றாக தெரிகிறது. 
அன்பை, பாசத்தை எத்தனையோ படங்கள் எத்தனையோ விதத்தில் சொன்னாலும், இது கொஞ்சம் புதுசு.
எத்தனை அவசரம் என்றாலும் சிக்னலில் பச்சை விளக்கு வந்தபின் செல்வது , பொய் சொல்லாதது , ஏமாற்ற தெரியாதது என குழந்தைகள் உலகத்தை காட்டி இருந்தாலும், அதன் மூலம் நாம் கற்க வேண்டியது எவ்வளோ இருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
இது குழந்தைகளுக்கான படம் மட்டும்  அல்ல, நாம் குழந்தைகளாக மாற வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் படம்,
ஒரு மென்மையான கதையை இத்தனை அழகாய் சொன்ன இயக்குனருக்கு தான் அத்தனை பெருமையும். வெட்டு, குத்து, காமம் என தடம் புரண்டு கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு நிறைய திருமகள்கள் வர வேண்டும் 
தெய்வதிருமகள் -  அள்ளி அனைத்து கொஞ்சப்பட வேண்டியவள்.